கொரோனாவால் இறந்தவர் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு


கொரோனாவால் இறந்தவர் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 May 2021 7:18 PM GMT (Updated: 9 May 2021 7:18 PM GMT)

நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவர் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பத்மநாபபுரம், 
நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவர் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவால் உயிரிழப்பு
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனா தொற்றால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். 
இதே போல வட்டம் பகுதியை சேர்ந்த 76 வயது முதியவரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதைத்தொடர்ந்து இரு உடல்களும் பிணவறையில் வைக்கப்பட்டது. வட்டம் பகுதியை சேர்ந்தவரின் உறவினர்கள் நேற்று காலையில் உடலை வாங்க ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது மருத்துவமனை பணியாளர்கள் எதிர்பாரத விதமாக மறவன்குடியிருப்பை சேர்ந்த முதியவரின் உடலை மாற்றி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கொரோனாவால் இறந்ததால் உடலை முழுவதுமாக பிளாஸ்டிக் கவரால் மூடி கொடுத்தனர். ஆனால் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் பிளாஸ்டிக் கவரை பிரித்து பார்க்காமல் ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
போராட்டம்
அதன்பிறகு மறவன்குடியிருப்பை சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தான் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதுபற்றி கேட்ட போது, ஆஸ்பத்திரி பணியாளர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை கூறினார்கள். உடனே மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரியிடம் புகார் செய்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 
மேலும், தங்களது உறவினர் உடலை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
நடவடிக்கை
அப்போது ஏற்கனவே புதைக்கப்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முதியவரின் உடலை தோண்டி எடுத்து அவரின் உறவினர்களிடம் ஒப்படைப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து வட்டம் பகுதியை சேர்ந்த முதியவர் உடல், அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மறவன்குடியிருப்பை சேர்ந்த முதியவர் உடலை தோண்டி எடுத்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு தக்கலை தாசில்தார் ஜெகதா விரைந்து உள்ளார் என மருத்துவக்கல்லூரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
கொரோனாவால் உயிரிழந்த முதியவர்கள் உடல்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story