தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை; சாலைகள் வெறிச்சோடின


தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 May 2021 4:04 PM GMT (Updated: 10 May 2021 4:04 PM GMT)

முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தேனி:
முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இரவு நேரங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, ஆட்டோ, வேன் போன்ற வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் மட்டும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படவும், மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதித்தும் அரசு உத்தரவிட்டது.
பஸ்கள் ஓடவில்லை
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. வாடகை வாகனங்களும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள் இயங்க தடை விதிக்கப்பட்ட போதிலும், குறைந்த எண்ணிக்கையில் அத்தியாவசிய தேவைக்காக இயங்கின.
பஸ்கள் இயக்கப்படாததால் தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
முழு ஊரடங்கு என்ற போதிலும் சாலைகளில் மக்கள் இயல்பாக நடமாடினர். சாலைகளில் வாகனங்களும் இயல்பாக உலா வந்தன. பகல் 12 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்பட்ட போதிலும், இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்களில் மக்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று திரும்பினர்.
போலீசார் கண்காணிப்பு
மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதியை மீறி உலா வந்த மக்களுக்கு பொதுமக்கள் அறிவுரைகள் வழங்கினர். போலீசார் வாகன தணிக்கையில் கெடுபிடி காட்டவில்லை. சில இடங்களில் வாகன தணிக்கை செய்யாமல் பாதுகாப்பு பணியில் மட்டும் போலீசார் ஈடுபட்டனர். இதனால், அத்தகைய இடங்களில் தலைக்கவசம் அணியாமலும், தலைக்கவசத்தை மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கண்ணாடியில் தொங்கவிட்டபடியும் பலர் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இது விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

Next Story