பஸ் ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின


பஸ் ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 May 2021 4:23 PM GMT (Updated: 10 May 2021 4:23 PM GMT)

முழுஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொள்ளாச்சி

முழுஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு ஊரடங்கு

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. 

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி, பழக்கடைகள், மருந்து கடைகள், பால் வினியோகம் மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.

இதனால் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட், திரு.வி.க. மார்க்கெட், தேர்நிலை திடல் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்கள் செயல்பட்டன. பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட தால் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. 

எனவே சாலைகள் மற்றும் பழைய, புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. 

போலீசார் கண்காணிப்பு

இதேபோன்று நகை கடைகள், ஜவுளி கடைகள், செல்போன் கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பேக்கரிகள், டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் திறந்து இருந்தன. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. 

மேலும் கேரளாவில் இருந்து இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வந்த வாகனங்களை சோதனை சாவடியில் போலீசார் திருப்பி அனுப்பினர்.

 இதற்காக கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுப்புணி, மீனாட்சிபுரம், செமனாம்பதி, ஜமீன்காளியாபுரம், வடக்குக்காடு, பெரும்பதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

எச்சரித்து அனுப்பினர் 

மேலும் நகரில் முக்கிய சாலைகளான பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, காந்தி சிலை சிக்னல் பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்த நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதேபோன்று ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. 


Next Story