வீட்டில் பீரோவை உடைத்து நகை-பணம் திருட்டு


வீட்டில் பீரோவை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 10 May 2021 8:34 PM GMT (Updated: 10 May 2021 8:34 PM GMT)

பெரம்பலூரில் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

நகை- பணம் திருட்டு
பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள சில்வர் நகரை சேர்ந்தவர் பிரபு(வயது 44). ஆழ்துளை கிணறு அமைக்கும் எந்திரத்துடன் கூடிய வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈச்சம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் பிரபுவின் மனைவி வனிதா நேற்று காலை சில்வர் நகரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பீரோவில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் வீட்டு கதவின் உள்பக்க தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணை
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஜன்னல் வழியாக கதவின் உள்பக்க தாழ்ப்பாளை கடப்பாறையால் நெம்பி, கதவை திறந்து உள்ளே வந்து பீரோவை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார், திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story