திருச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மண்டை உடைப்பு


திருச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மண்டை உடைப்பு
x
தினத்தந்தி 10 May 2021 10:36 PM GMT (Updated: 10 May 2021 10:36 PM GMT)

திருச்சியில் தகராறை விலக்க சென்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மண்டை உடைக்கப்பட்டது.


திருச்சி, 
திருச்சியில் தகராறை விலக்க சென்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மண்டை உடைக்கப்பட்டது.

தகராறு செய்த வாலிபர்

திருச்சி பிராட்டியூர் அருகே உள்ள ஆலங்குளம் என்ற இடத்தில் தனது வீட்டின் முன் வாலிபர் ஒருவர் தகராறு செய்து கொண்டிருப்பதாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர், போலீஸ்காரர் ஜோன் ஜோசப் ஆகியோர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து விட்டு நின்று கொண்டிருந்ததால் அவரை பிடிக்க முடியவில்லை.

மண்டை உடைப்பு

அதற்குள் அந்த வாலிபர் தான் வைத்திருந்த உருட்டுக்கட்டையால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகியோரின் மண்டையில் அடித்தார். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டது. போலீஸ்காரருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள், போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடுதிரும்பினர். இதற்கிடையே போலீசாரை தாக்கிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து செசன்ஸ்கோர்ட்டு போலீசில் ஒப்படைத்தனர். 

போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் பெயர் பாலமுருகன் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செஷன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story