மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு


மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 11 May 2021 1:16 AM GMT (Updated: 11 May 2021 1:17 AM GMT)

முழு ஊரடங்கையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

முழு ஊரடங்கையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் நேற்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மளிகை, காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இது தவிர கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஏற்கனவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் அவசர தேவைகளுக்காக நீலகிரிக்கு வரும் பயணிகள் இ-பதிவு முறையில் அனுமதி பெற்று வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழக-கர்நாடகா, கேரளா மாநிலங்களின் எல்லைகளில் கூடலூர் போலீசார் இரவு, பகலாக வாகன சோதனை நடத்தி வந்தனர். 

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாநில எல்லைகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு, தாளூர், கக்கநல்லா உள்ளிட்ட சோதனைச்சாவடிகள் இருக்கிறது. 

இதேபோன்று கேரளா, கர்நாடகா சுகாதார துறையினரும் மாநில எல்லைகளில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் உரிய ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆனால் வழக்கம்போல் சரக்கு லாரிகள், வாகனங்களை இயக்க போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

எண்ணிக்கை குறைந்தது

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாநில எல்லைகளை கண்காணிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 

அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமல் வரும் வாகனங்களை நீலகிரிக்கு அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் முழு தணிக்கை செய்யப்படுவதால் தமிழகத்துக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story