கட்டுக்கடங்காத கொரோனாவால் ஒரே நாளில் 168 பேர் பாதிப்பு


கட்டுக்கடங்காத கொரோனாவால் ஒரே நாளில் 168 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 11 May 2021 8:20 PM GMT (Updated: 11 May 2021 8:20 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுக்கடங்காத கொரோனாவிற்கு ஒரே நாளில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று மற்றும் நிமோனியா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெரம்பலூர்:

168 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 210 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,817 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு 31 பேர் பலியாகி உள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் பூஜ்ஜியம் தொற்று என்று இருந்த நிலையில், கடந்த 5-ந்தேதி முதல் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி அரசு மருத்துவமனையில் 109 பேருக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 59 பேருக்கும் என மொத்தம் 168 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிமோனியா வைரசால் உயிரிழப்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் தற்போது 838 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம், ரெங்காநகர், ரோஸ்நகர் உள்ளிட்ட பகுதிகள் கொரோனா தொற்று பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவைப்போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் நிமோனியா வைரசின் நுரையீரல் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பலனளிக்காமல், தினமும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், பெரம்பலூரில் ஆத்தூர் சாலையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கியாஸ் எரியூட்டும் தகன மயானத்தில் ஒரே நாளில் 7 முதல் 8 பிரேதங்களை எரியூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 10 முதல் 12 ஆக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எரியூட்டும் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
2 நாளில் 15 பேர்...
பெரம்பலூரில் கடந்த 2 நாட்களில், ஓய்வு பெற்ற பள்ளித்தலைமை ஆசிரியர், வாகன உரிமையாளர் உள்பட 15 பேர் நிமோனியா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். நிமோனியா வைரஸ் தாக்கி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நெகடிவ் என்று முடிவு வருவதால், இதில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கொரோனா உறுதி செய்யப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையுடன் சேர்க்கப்படுவதில்லை. அப்படி சேர்த்தால் மொத்தம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 70-ஐ எட்டும்  என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 37 ஆயிரத்து 613 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை, தடுப்பூசி மையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையம், வேப்பூர், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைகள், லெப்பைக்குடிகாடு, வாலிகண்டபுரம், ஆலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 4,560 யூனிட்டுகளும், கோவேக்சின் 560 யூனிட்டுகளும் இருப்பில் உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story