மூச்சு திணறலால் அவதிப்படுவோரின் சிகிச்சைக்காக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மத்திய அரசு அனுப்பி வைத்தது


மூச்சு திணறலால் அவதிப்படுவோரின் சிகிச்சைக்காக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மத்திய அரசு அனுப்பி வைத்தது
x
தினத்தந்தி 13 May 2021 4:47 PM GMT (Updated: 13 May 2021 4:47 PM GMT)

மூச்சு திணறலால் அவதிப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு புதுவை மாநிலத்திற்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை (கான்சன்ட்ரேட்டார்) வழங்கியுள்ளது. இதனை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சு திணறலுடன் மருத்துவ மனைகளுக்கு வரும் நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை சரி செய்வதற்கு தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை புதுச்சேரிக்கு மத்திய அரசு அவசரமாக 100 எண்ணிக்கைகளை அனுப்பி வைத்துள்ளது.

இதன்மூலம் மூச்சுத் திணறலுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் கொரோனா நோயாளிகளை தற்காலிகமாக உயிர்காக்கும் ஆக்சிஜன் செறிவூட்டியை வார்டில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து சகஜ நிலைக்கு வந்த பிறகு காலியாக உள்ள ஆக்சிஜன் படுக்கை உள்ள வார்டு களுக்கு மாற்ற உதவியாக இருக்கும். இதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைந்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பயன் பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story