நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 14 May 2021 8:46 PM GMT (Updated: 14 May 2021 8:46 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்:
வானிலை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 
இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 15 மி.மீட்டர் என்ற அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 6 மி.மீட்டரும், 18-ந் தேதி 4 மி.மீட்டரும் மழை பெய்யும். இன்றும், நாளையும் மணிக்கு 25 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும்.
நாளை மறுநாள் 10 கி.மீட்டர் வேகத்திலும், 18-ந் தேதி மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 85, 90, 90, 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 55, 80, 65, 55 சதவீதமாகவும் இருக்கும்.
கனமழை
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் இன்றும், நாளையும் மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் அதற்கேற்ப கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும் வெப்ப அயிற்சியை தவிர்க்க தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கலவையை உபயோகிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story