நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- வினாடிக்கு 4,659 கனஅடி தண்ணீர் வருகிறது


நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- வினாடிக்கு 4,659 கனஅடி தண்ணீர் வருகிறது
x
தினத்தந்தி 16 May 2021 10:39 PM GMT (Updated: 16 May 2021 10:39 PM GMT)

நீர்பிடிப்பு மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 4,659 கனஅடி தண்ணீர் வருகிறது.

பவானிசாகர்
நீர்பிடிப்பு மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 4,659 கனஅடி தண்ணீர் வருகிறது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. 
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்தே புயலின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நீர்மட்டம் உயர்வு
நேற்று முன்தினம் மதியம் 12 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.14 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,064 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 1,050 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 659 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 88.60 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 1,050 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story