பெண் போலீஸ் வீட்டில் 27½ பவுன் நகை கொள்ளை


பெண் போலீஸ் வீட்டில் 27½ பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 20 May 2021 5:26 PM GMT (Updated: 20 May 2021 5:26 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே பெண் போலீஸ் வீட்டில் 27½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவருடைய மனைவி வள்ளி (வயது 55). இவர்களுக்கு சுதாகர் என்கிற மகனும், தாவாயி, சித்ரா, ஆனந்தி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இதில் ஆனந்தி விழுப்புரம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் விஜயசாரதி என்பவரும் போலீஸ்காரர் ஆவார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வள்ளி வீட்டில் வசித்து வருகின்றனர்.

பீரோ உடைப்பு 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வள்ளி தனது 2-வது மகள் சித்ராவுடன் தூங்கினார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். 
பின்னர் அவர்கள் வள்ளி, சித்ரா ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து கொண்டிருந்தனர். இந்த சத்தம் கேட்டு வள்ளியும், சித்ராவும் திடுக்கிட்டு எழுந்து, அந்த அறையி்ன் பின்புற கதவை திறந்து வெளியே சென்று அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.

கொள்ளை 

 அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் பீரோவில் இருந்த 27½ பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம், 300 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். 
 இது பற்றி தகவல் அறிந்ததும் கச்சிராயப்பாளையம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story