செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் மருந்து அறிமுகம்


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் மருந்து அறிமுகம்
x
தினத்தந்தி 21 May 2021 3:37 AM GMT (Updated: 21 May 2021 3:37 AM GMT)

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, 

கொரோனா தொற்றின் முதல் அலையின் போது இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் டி.ஆர்.டி.ஓ. சார்பில் பவுடர் வடிவிலான கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 20 மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது. தமிழகத்தின் சார்பில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வினோத்குமார் ஆதிநாராயணன் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுத்து சோதனையில் ஈடுபட்டார். கொரோனா நோயாளிகள் விரைவில் குணம் அடைந்தது தெரியவந்தது.

இது குறித்து டாக்டர் வினோத்குமார் ஆதி நாராயணன் கூறியதாவது:-

டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ. அமைப்பு கொரோனா நோய்க்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த மருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த மருந்தை வழங்கி சோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 110-நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருந்து சிறப்பான முறையில் செயல்பட்டது. பவுடர் வடிவிலான மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். நோயாளிகளின் உடல் எடைக்கேற்ப மருந்தின் அளவுகள் மாறுபடும். நோயாளி ஒருவருக்கு காலை. மாலை இரு வேளைகளில் இந்த மருந்து வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மருந்தை கொடுக்க வேண்டும். மேலும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்ககளுக்கு மட்டுமே இந்த மருந்தை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story