எண்ணூர் தாமரை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் தொற்று நோய் பரவும் அபாயம்


எண்ணூர் தாமரை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் தொற்று நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 23 May 2021 3:37 AM GMT (Updated: 23 May 2021 3:37 AM GMT)

எண்ணூர் தாமரை குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் காமராஜ் சாலை அருகே தாமரை குளம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த குளத்தில், மழைகாலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்கும். இதனால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாகவும் இருந்து வந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விட்டனர். இதனால் தற்போது இந்த குளத்தின் பரப்பளவு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மழை காலத்தில் குளம் நிரம்பி, சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் சுற்றுவட்டாரத்தில் பல குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை இந்த குளத்தில் விடுகின்றனர். இதனால் தாமரைகுளம் தற்போது சேறும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.

செத்து மிதக்கும் மீன்கள்

இந்த நிலையில் நேற்று தாமரை குளத்தில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் மேலும் துர்நாற்றம் வீசியது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அந்த தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

இதுபற்றி தகவல் அறிந்ததும் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று தாமரை குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதை பார்வையிட்டார். பின்னர் உடனடியாக செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள், செத்து கிடந்த மீன்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் எதாவது ரசாயன கழிவுகள் குளத்து நீரில் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story