சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பேரம்பாக்கம் பஜார் கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த பொதுமக்கள்


சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பேரம்பாக்கம் பஜார் கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 May 2021 6:07 AM GMT (Updated: 23 May 2021 6:07 AM GMT)

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பேரம்பாக்கம் பஜார் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் அதிக அளவில் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ந்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்போது மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்து இருந்தார்.

மேலும் அடுத்த ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றும், இன்று (ஞாயிற்றுக்கிழமை)யும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் நேற்று காலை முதலே இதை சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பொருட்களை வாங்க கடைகள் முன்பு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பஜார் வீதியில் உள்ள கடைகளில் பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த 10 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட கடைகளில் கடைகளில் கூடினார்கள்.

அபராதம்

அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கூடியதால் மேலும் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மப்பேடு இன்ஸ்பெக்டர் கண்ணையா உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து கடைகளில் இருந்த பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

மேலும் கடைகளில் அதிக கூட்டம் கூடியதாக 20-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர். பின்னர் போலீசார் பேரம்பாக்கம் பஜாரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முக கவசம் அணியாமலும் தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் 30 பேருக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் பேரம்பாக்கம் பஜார் வீதியில் வாகனங்கள் செல்லாதவாறு இரண்டு பகுதிகளிலும் இரும்பு தடுப்புகளை கொண்டு சாலைகளை முழுவதுமாக அடைத்தனர். அரசின் விதிமுறைகளை மீறி தொற்றுநோய் பரவும் விதமாக கடைகளில் கூட்டம் கூடினால் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

Next Story