மாவட்டத்தில் புதிதாக 415 பேருக்கு கொரோனா தொற்று மேலும் 2 பேர் சாவு


மாவட்டத்தில் புதிதாக 415 பேருக்கு கொரோனா தொற்று மேலும் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 23 May 2021 5:50 PM GMT (Updated: 23 May 2021 5:50 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 2 பேர் இறந்தனர்.

புதுக்கோட்டை:
தொற்று பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் சமீபத்தில் தினமும் தொற்று எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ளது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 212 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாாவுக்கு தற்போது 3 ஆயிரத்து 358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பெண்கள் சாவு
இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் ஒருவரும், திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி ஒருவரும் என 2 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 189 ஆக உயர்ந்தது.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், ஒரு சிலர் வீட்டிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 
இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4 பேர் இறந்துள்ள நிலையில், 205 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது.
திருமயம்
திருமயம் ஊராட்சி உட்பட்ட சந்தப்பேட்டை, மகமாயி புரம், மணவாளன்கரை, சத்தியமூர்த்தி நகர், கோட்டை, அகில்கரை பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
திருமயம் பகுதியில் மகமாயி புரத்தில் இரண்டு நபர்களுக்கும், மணவாளன் கரை பகுதியில் ஒரு நபருக்கும் கொரோனா வைரஸ் தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து பகுதியிலும் ஊராட்சி சார்பில், துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி பிளீச்சிங் பவுடன் தெளிக்கப்பட்டு, வீடுகள் தோறும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை ஒன்றிய அளவில் கொரோனா தொற்றுக்கு நேற்று 6 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 182 பேர் மொத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 80 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story