நீலகிரி மலைப்பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


நீலகிரி மலைப்பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 May 2021 8:18 PM GMT (Updated: 24 May 2021 8:18 PM GMT)

நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகா்
நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீர்பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும்.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,084 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 88.91 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,716 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் 89.19 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1,050 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story