கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 25 May 2021 5:22 PM GMT (Updated: 25 May 2021 5:22 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 முதல் 500 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கொரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. 
மாவட்டத்தில் ஒரே வீதியில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமிநாசினியால் நன்கு சுத்தம் செய்யப்படுவதோடு அந்த பகுதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

123 இடங்கள்

அந்த வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நாப்பாளைய தெரு, காமராஜர் வீதி, மகாராஜபுரம் குயவர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட 18 இடங்களும் மற்றும் ஊரக பகுதிகளான அரசூர், திருமுண்டீச்சரம், வி.நெற்குணம், பள்ளித்தென்னல், நன்னாடு, தொடர்ந்தனூர், கூனிமேடு, ஒதியத்தூர், ஆகாசம்பட்டு, கோலியனூர், மாம்பழப்பட்டு உள்ளிட்ட 105 இடங்களும் என மாவட்டம் முழுவதும் 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் கிருமி நாசினி திரவத்தால் நன்கு சுத்தம் செய்யப்பட்டதோடு அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கவும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாதவாறு இருக்கவும் அப்பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவைான மருத்துவ வசதிகள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 

Next Story