பொள்ளாச்சியில் முட்புதருக்குள் காயங்களுடன் கிடந்த பெண் சாவு


பொள்ளாச்சியில் முட்புதருக்குள் காயங்களுடன் கிடந்த பெண் சாவு
x
தினத்தந்தி 25 May 2021 6:25 PM GMT (Updated: 25 May 2021 6:25 PM GMT)

பொள்ளாச்சியில் முட்புதருக்குள் காயங்களுடன் கிடந்த பெண் சாவு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு சபரிகார்டன் பகுதியில் முட்புதரில் பெண் ஒருவர் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அந்த பெண்ணுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து நகர கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

அதில் அந்த பெண்ணின் உடலில் ஆங்காங்கே சிறு, சிறு காயங்கள் இருப்பது தெரியவந்தது. 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. 

கருநீல நிறத்தில் நைட்டி மட்டும் அணிந்து இருந்தார். எனவே இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

பெண் மயங்கி கிடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தப் பட்டது. அதில் அந்த பெண்ணை தரதரவென இழுத்து வந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. எனவே அவரை கொலை செய்யும் நோக்கத்தில் அடித்து காயப்படுத்தி முட்புதருக்குள் வீசி இருக்க வாய்ப்பு உள்ளது. 

எனவே அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அது போன்று அந்தப்பகுதியில் யாராவது சந்தேகத்துக்கு இடமாக சுற்றினார்களா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story