திருத்துறைப்பூண்டி அருகே, தரமற்ற அரிசி வினியோகம்: ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


திருத்துறைப்பூண்டி அருகே, தரமற்ற அரிசி வினியோகம்: ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 May 2021 5:54 PM GMT (Updated: 26 May 2021 5:54 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே தரமற்ற அரிசி வினியோகத்தை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது நுணாகாடு ஊராட்சி. இங்கு உள்ள ஆட்டூர் கிராமம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்வதாகவும், அந்த அரிசியை சமைத்து சாப்பிட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளும் பலமுறை புகார் தெரிவித்தும் தரமான அரிசியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் நேற்று கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த ஒரு ஆண்டாக அந்த ரேஷன் கடையில் தரமற்ற அரிசியை வினியோகம் செய்வதாக கிராம மக்கள் கூறினர். மேலும் தரமான அரிசியை வினியோகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சுமார் அரை மணிநேர போராட்டத்துக்கு பின்னர் இந்த போராட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story