திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க கோரிக்கை


திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2021 9:46 PM GMT (Updated: 29 May 2021 9:46 PM GMT)

திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை:
தமிழக அரசின் சார்பில் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும், பள்ளி படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு வருமான சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று ஆகியவை பெற்று இணைக்கப்பட வேண்டும்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற இணையதளத்தில் திருமண தேதிக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் விண்ணப்பங்களை பதிவு செய்யக்கூடிய பொது இ-சேவை மையங்கள் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் திருமண உதவித்தொகை பெற வைகாசி மாதத்தில் திருமணம் செய்த பலர் விண்ணப்பிக்காமல் உள்ளனர். மேலும் திருமணம் செய்ய உள்ள பலரும் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது தொடர்பாக முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி திருமண உதவித்தொகை பெறுவதற்கு திருமணம் முடிந்த பிறகும் பதிவு செய்யலாம் என கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வேப்பந்தட்டை தாலுகா பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story