கொரோனா பாதிப்பால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு 5¾ லட்சம் அழைப்புகள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்


கொரோனா பாதிப்பால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு 5¾ லட்சம் அழைப்புகள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 30 May 2021 3:13 AM GMT (Updated: 30 May 2021 3:13 AM GMT)

கொரோனா பாதிப்பால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு 5¾ லட்சம் அழைப்புகள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முதற்கட்ட உடல்பரிசோதனை மையங்களுக்கு மாநகராட்சியின் கார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் மூலம் அழைத்து செல்லப்பட்டு பரிசோதனைகளுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் டாக்டர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

45 வயதுக்கு கீழுள்ள நபர்களுக்கு மாநகராட்சி மருத்துவ குழுவின் மூலம் வீடுகளுக்கு சென்று காய்ச்சல், சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு போன்ற முதற்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் டாக்டர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

5¾ லட்சம் அழைப்புகள்

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும், மாநகராட்சியின் சார்பில் மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பயிற்சி டாக்டர்கள் மூலமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மண்டல கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து பயிற்சி டாக்டர்களின் வாயிலாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 418 தொலைபேசி அழைப்புகளின் மூலம் உடல்நிலை குறித்து தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

இதில் தொடர்ந்து 5 நாட்களுக்கு காய்ச்சல் இருந்த 1,227 நபர்களுக்கும், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக அறியப்பட்ட 360 நபர்களுக்கும் ஆஸ்பத்திரிகளில் மேல்சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு உடல்நிலை குறித்து விவரம் கேட்கப்பட்ட நபர்களில் 165 நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் உடல்நிலையில் சிரமங்கள் இருப்பதாக தெரிவித்த 260 நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு அடுத்தகட்ட சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story