ஊட்டி அருகே தனிமைப்படுத்துதலை மீறிய 14 பேர் மீது வழக்கு


ஊட்டி அருகே தனிமைப்படுத்துதலை மீறிய 14 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 May 2021 5:11 PM GMT (Updated: 30 May 2021 5:18 PM GMT)

ஊட்டி அருகே தனிமைப்படுத்துதலை மீறிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலையோரம் பழங்களை விற்றவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஊட்டி
ஊட்டி அருகே தனிமைப்படுத்துதலை மீறிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலையோரம் பழங்களை விற்றவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

கொரோனா பரவல்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அங்கே வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. உள்ளே வசிப்பவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறதுஇதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே சென்று வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.

தனிமையில் இருக்காமல்...

இந்த நிலையில் நேற்று ஊட்டி அருகே தலைகுந்தா பகுதி அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. அப்பகுதியில் தனிமையில் இருக்காமல் 3 பேர் வெளியே சாலைகளில் சுற்றித்திரிந்து உள்ளனர். 

இதை அப்பகுதியில் ரோந்து சென்ற புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நேரில் கண்டறிந்து, ஜெயபிரகாஷ் (வயது 39), விஷாத் (33), தினேஷ்குமார் (36) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். 

2 கார்கள் பறிமுதல்

இதேபோல் ஊட்டி அருகே சோலூர் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வந்த மதேஷ் (26), கிரண் (20), முருகேஷ் (26), ரவிச்சந்திரன் (42) ஆகிய 4 பேர் மீது புதுமந்து போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் மணியபுரம் பகுதியில் தனிமைப்படுத்துதலை மீறிய பரமசிவம், ரங்கராஜ், சிவக்குமார், தூதூர் மட்டத்தில் சுப்பிரமணி, விஸ்வநாதன், பழனிசாமி, சம்பத் ஆகியோர் மீது கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஊட்டி கமர்சியல் சாலையில் 2 கார்களில் இருந்து காய்கறிகள், பழங்களை தரையில் இறக்கி வைத்து விற்பனை செய்தனர்.

இதை கண்ட ஊட்டி நகர மத்திய போலீசார், அனுமதி சீட்டு வாங்கி விற்பனை செய்தாலும் சாலைகளில் பொருட்களை வைத்து விற்பனை செய்ய அனுமதி இல்லை என்று எச்சரிக்கை விடுத்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். தள்ளுவண்டி கடையில் பழங்கள் விற்ற வியாபாரியை எச்சரித்து அனுப்பினர்.


Next Story