பட்டாசு வெடித்து விரட்ட முயன்ற விவசாயிகளை துரத்திய யானை


பட்டாசு வெடித்து விரட்ட முயன்ற விவசாயிகளை துரத்திய யானை
x
தினத்தந்தி 30 May 2021 5:30 PM GMT (Updated: 30 May 2021 5:30 PM GMT)

பூதப்பாண்டி அருகே யானையை பட்டாசு வெடித்து விவசாயி விரட்ட முயன்ற போது, அவரை யானை துரத்தியது. இதனால் ½ கி.மீ. தூரம் ஓடி சென்று உயிர் தப்பியதாக கூறினார்.

அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே யானையை பட்டாசு வெடித்து விவசாயி விரட்ட முயன்ற போது, அவரை யானை துரத்தியது. இதனால் ½ கி.மீ. தூரம் ஓடி சென்று உயிர் தப்பியதாக கூறினார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
யானைகள் நடமாட்டம்
பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி பகுதியில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து, அடிக்கடி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தெள்ளாந்தி உடையார் கோணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை, தென்னை, புடலை, கோ கோ, இஞ்சி போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன் தன் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். அங்கு வந்த யானை 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தது.
வாழை நாசம்
அதைத்தொடர்ந்து அவர், பூதப்பாண்டி வனசரகர் திலிபனுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து திலிபன் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, யானை நாசம் செய்த வாழைகளை பார்வையிட்டனர். இரவு நேரத்தில் வனக்காவலர்கள் யானையை விரட்ட பட்டாசுகளை வெடித்தனர். 
ஆனால் அந்த யானை அங்கிருந்து செல்லாமல் சுற்றி வருகிறது. அதன்பிறகு இன்னொரு தோட்டத்தில் இருந்த 50 தென்னங்கன்றுகளை பிடுங்கி வீசியது.
யானை துரத்தியது
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் உள்பட விவசாயிகள் பட்டாசு வெடித்தனர். 
ஆனால் பட்டாசு சத்தம் கேட்டு யானை காட்டுக்குள் செல்லவில்லை. மாறாக மணிகண்டன் உள்பட விவசாயிகளை அந்த யானை துரத்தியது. இதனால் செய்வதறியாது அனைவரும் ஓடி தப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உயிர் தப்பியது எப்படி?
இந்த சம்பவம் பற்றி மணிகண்டன் கூறியதாவது:-
நான் உடையார்கோணம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். 4½ ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, புடலை, இஞ்சி போன்றவற்றை விளைவித்து வருகிறேன். இங்கு கரடி போன்ற வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும். ஆனால் தற்போது தான் யானை வந்துள்ளது.
தற்போது அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானை, காளிகேசம் வனப்பகுதியில் இருந்து பிரிந்து தனியாக வந்துள்ளது. எனவே அது வாழை, தென்னங்கன்றுகளை நாசம் செய்து வருகிறது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் வந்து பார்த்து விட்டு, இரவில் பட்டாசு வெடித்தால் யாைன ஓடி விடும் என்று கூறினார்கள். அதன்படியே பட்டாசு வெடித்தோம். அந்த சத்தம் கேட்டதும் யானை ஓடாமல், எங்களை துரத்தி கொண்டு வந்தது. இதனால் நாங்கள் ½ கி.மீ. தூரம் ஓடி சென்று உயிர் தப்பினோம். 
நிவாரணம்
எனவே இந்த யானையை விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் வாழை, தென்னங்கன்று சேதத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் யானை உள்பட வன விலங்குகள் வராதபடி மின்வேலி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story