பண்ருட்டி அருகே தண்ணீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து விற்பனை 4 பேர் கைது


பண்ருட்டி அருகே தண்ணீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து விற்பனை 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2021 6:22 PM GMT (Updated: 30 May 2021 6:22 PM GMT)

பண்ருட்டி அருகே தண்ணீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுப்பேட்டை,

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும் வாடிக்கையாகி விட்டது. 

 அவ்வாறு சாராயம் விற்பனை செய்யும் சிலர் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். கொரோனா ஊரடங்கிலும் கடலூர் மாவட்டத்தில் சாராய விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. 

தண்ணீர் பாட்டிலில் சாராயம் 

இந்த நிலையில் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் நேற்று பூண்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்கு 4 பேர் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி பார்த்தனர். அந்த தண்ணீர் பாட்டிலில் சாராயம் இருந்தது.
 
ஒரு பாட்டில் ரூ.100-க்கு விற்பனை 

இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் மகன் வேல்முருகன்(வயது 38), ரங்கநாதன் மகன் மணிமாறன்(39), சிறுவத்தூரை சேர்ந்த பெரியண்ணா (50), மணிகண்டன் (30) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து, அதனை 350 மில்லி லிட்டர் அளவு கொண்ட தண்ணீர் பாட்டிலில் அடைத்து ஒரு பாட்டில் ரூ.100-க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. 


இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 150 பாட்டில்களில் இருந்த சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story