நெல்லை டவுனில் காய்கறி கடைகள் இடமாற்றம்


நெல்லை டவுனில்  காய்கறி கடைகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 30 May 2021 7:55 PM GMT (Updated: 30 May 2021 7:55 PM GMT)

நெல்லை டவுனில் காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை:
நெல்லை டவுனில் காய்கறி  கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

காய்கறி மார்க்கெட்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் காய்கறி, மளிகை கடைகள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எளிமையாக கிடைக்க தள்ளு வண்டிகள், ஆட்டோக்களில் வீதிகளில் சென்று காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நெல்லை மாநகராட்சியில் ஏராளமான வியாபாரிகள் பதிவுசெய்து உரிமம் பெற்றுள்ளனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் குவிகிறார்கள். இதனால் சமூக இடைவெளி இன்றி கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கடைகள் மாற்றம்

இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் காய்கறி வியாபாரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி நெல்லை டவுன் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் டவுன் நயினார்குளம்  மொத்த மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 60 சில்லறை விற்பனை கடைகள் வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று 60 காய்கறி கடைகள் புதிதாக தொடங்கப்பட்டன. அங்கு காய்கறிகள் ஒட்டு மொத்தமாக குவித்து வைக்கப்பட்டன. அங்கிருந்து தெருக்களுக்கு சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களுக்கு காய்கறிகளை வியாபாரிகள் எடுத்துச் சென்றனர். 

நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும், சாப்டா் மேல்நிலைப்பள்ளியில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் காய்கறி மொத்த மார்க்கெட் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் வரக்கூடாது

இது தொடர்பாக சங்கத் தலைவர் செல்வக்குமார் கூறுகையில், காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் மொத்தமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் 60 கடைகள் சாப்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இங்கு பொதுமக்கள் நேரடியாக வந்து காய்கறிகளை வாங்க முயற்சி செய்யக்கூடாது. மாநகராட்சி அனுமதி பெற்ற காய்கறி வியாபாரிகள் மட்டுமே வர வேண்டும் என்றார்.

Next Story