ஈரோடு மாநகராட்சி சார்பில் இணையதளம் மூலம் மளிகை பொருட்கள் வாங்க ஏற்பாடு


ஈரோடு மாநகராட்சி சார்பில் இணையதளம் மூலம் மளிகை பொருட்கள் வாங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 30 May 2021 9:07 PM GMT (Updated: 30 May 2021 9:07 PM GMT)

ஈரோடு மாநகராட்சி சார்பில், இணையதளம் மூலம் மளிகை பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

ஈரோடு
ஈரோடு மாநகராட்சி சார்பில், இணையதளம் மூலம் மளிகை பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது
காய்கறி-மளிகை பொருட்கள்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநகர் பகுதியில் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் காய்கறி, பழங்கள் மளிகை பொருட்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து கடந்த 22-ந்தேதி முதல் குடியிருப்பு பகுதிக்கு வாகனங்கள் நேரடியாக சென்று மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 24-ந்தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக காய்கறி, மளிகை கடைகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
புகார்
இதைத்தொடர்ந்து மாநகர் பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதலில் 132 வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு 250 வாகனங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் செல்லவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் மேலும் கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் 100-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மளிகை பொருட்கள் 20 வாகனங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கு மளிகை பொருட்கள் வண்டிகள் வருவது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஊரடங்கு நீட்டிப்பு
இந்த நிலையில் தமிழக அரசு தளர்வில்லா முழு ஊரடங்கை வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி வரை நீடித்துள்ளது. தற்போது கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் வழக்கம்போல் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் நடமாடும் வண்டிகள் மூலம் பொது மக்கள் குடியிருப்புக்கு சென்று வினியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர் பகுதியில் காய்கறியை பொறுத்தவரை எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஆங்காங்கே காய்கறி வண்டி, நடமாடும் தள்ளுவண்டி மூலம் காய்கறிகளை மக்கள் வாங்கி விடுகின்றனர். ஆனால் மளிகை பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.
இணையதளம்
எனவே மாநகர் பகுதியில் கூடுதல் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மளிகை பொருட்கள் தங்கு தடையின்றி வினியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மாநகராட்சி சார்பில் tnurbantree.tn.gov.in/erode/ என்ற இணையதளம் முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரிக்கு சென்று லிங்கை கிளிக் செய்தால் அதில் மளிகை கடைகளின் பெயர்கள், மளிகை கடைக்காரர்களின் பெயர்கள், அவர்களது செல்போன் எண்கள், மளிகை கடை முகவரிகள், அவர்களின் இ-மெயில் முகவரிகள் தெளிவாக கொடுக்கபட்டிருக்கும்.
அதை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் பகுதிக்கு அருகே உள்ள மளிகை கடை எண்களை பெற்று அவர்களை தொடர்பு கொண்டு தேவையான மளிகை பொருட்களை போனில் ஆர்டரின் பெயரில் கொடுக்கலாம். அவர்கள் ஆர்டரை பெற்றுக்கொண்டு வீடுகளில் டோர் டெலிவரி மூலம் மளிகை பொருட்களை வினியோகம் செய்வார்கள். இந்த இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Next Story