ஈரோடு பஸ் நிலையத்தில் காய்கறிகள் வாங்க குவிந்த வியாபாரிகள்- சில்லரை வியாபாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை


ஈரோடு பஸ் நிலையத்தில் காய்கறிகள் வாங்க குவிந்த வியாபாரிகள்- சில்லரை வியாபாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 May 2021 9:07 PM GMT (Updated: 30 May 2021 9:07 PM GMT)

ஈரோடு பஸ் நிலையத்தில் காய்கறிகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். அங்கு சில்லரை வியாபாரத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு பஸ் நிலையத்தில் காய்கறிகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். அங்கு சில்லரை வியாபாரத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
காய்கறிகள் விற்பனை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தமிழகம் முழுவதும் அனைத்து காய்கறி மார்க்கெட்டுகள், கடைகள் மூடப்பட்டு உள்ளன. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு உள்ளது. மேலும், வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு காய்கறிகளை வினியோகம் செய்ய ஈரோடு பஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மொத்த வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், சில்லரை வியாபாரம் செய்யக்கூடாது என்று வியாபாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்த வியாபாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நுழைவு வாயில் மூடல்
ஈரோடு பஸ் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரிகளை தவிர பொதுமக்களும் காய்கறிகள் வாங்க குவிந்தார்கள். இதனால் சில்லரை வியாபாரம் நடந்து வந்தது. மேலும், கூட்ட நெரிசலும் ஏற்பட தொடங்கியது. எனவே தொற்று பரவும் அபாயம் உருவானது. இதையடுத்து சில்லரை விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரோடு பஸ் நிலையத்திற்குள் செல்ல 4 நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் நாச்சியப்பா வீதி மற்றும் நவீன கழிப்பிடம் அருகில் உள்ள நுழைவு வாயில்கள் பொதுமக்கள் நுழையாத வகையில் தகரம் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன. மேலும், மேட்டூர் ரோடு நுழைவு வாயிலும் தடுப்பு வேலி அமைத்து முழுவதுமாக மூடப்பட்டது. எனவே சத்தி ரோடு நுழைவு வாயில் வழியாக மட்டுமே வியாபாரிகள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. அங்கும் ஒரே ஒரு வாகனம் மட்டுமே நுழையும் வகையில் தகரம் வைத்து மூடப்பட்டு உள்ளது.
முக கவசம்
நுழைவு வாயில் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் நின்று வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள். அப்போது வீதி, வீதியாக சென்று விற்பனை செய்வதற்கான உரிய அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பஸ் நிலையத்துக்குள் செல்ல அவர்கள் அனுமதித்தனர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். இருந்தாலும், இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு சிறிய கடைக்காரர்கள், பொதுமக்கள் பலர் தடுப்புகளின் ஓரமாக உள்ளே நுழைந்தனர். எனவே மொத்த வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்காணித்த போலீசார், சில்லரை விற்பனை செய்யக்கூடாது என்றும், முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவுறுத்தினர். அதேசமயம் கொரோனா தொற்று அச்சமின்றி வியாபாரிகள் முறையாக முக கவசம் அணியாமலும், தனி இடைவெளியை கடைபிடிக்காமலும் வியாபாரம் செய்வதில் மட்டும் மும்முரமாக காணப்பட்டனர்.
தொற்று அபாயம்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஈரோடு பஸ் நிலையத்தில் காய்கறிகள் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகளில் மொத்தமாக கொண்டு வரும் காய்கறிகளை காலையில் இறக்குவதற்கு அனுமதி வழங்குகிறோம். அதன்பிறகு வீதி, வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்யும் நடமாடும் கடைக்காரர்களுக்கு மட்டும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் சிலர் தொற்று அபாயத்தை தெரிந்து கொள்ளாமல் கூட்டமாக நின்று காய்கறிகளை வாங்குகின்றனர். நாங்களும், போலீசாரும் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மேலும், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story