தாளவாடி அருகே தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்- வாழை, கரும்பு, தக்காளி நாசம்


தாளவாடி அருகே தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்- வாழை, கரும்பு, தக்காளி நாசம்
x
தினத்தந்தி 30 May 2021 9:08 PM GMT (Updated: 30 May 2021 9:08 PM GMT)

தாளவாடி அருகே தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தது. இதில் வாழை, கரும்பு, தக்காளி நாசம் ஆனது.

தாளவாடி
தாளவாடி அருகே தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தது. இதில் வாழை, கரும்பு, தக்காளி நாசம் ஆனது. 
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளார்கள். 
இந்தநிலையில் தாளவாடி அருகே உள்ள கெட்டவாடியைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 42). விவசாயி. இவர் தன்னுடைய 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை, கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
வாழைகள் நாசம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் காட்டை விட்டு வெளியேறி இளங்கோவின் தோட்டங்களுக்குள் புகுந்தன. பின்னர் வாழை குருத்துகளை தின்றும், மரங்களை மிதித்தும் நாசம் செய்தன. மேலும் கரும்புகளையும் மிதித்து அட்டகாசம் செய்தது. தோட்டத்து வீட்டில் படுத்திருந்த இளங்கோ சத்தம் கேட்டு எழுந்து தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது யானைகள் தோட்டத்தில் அட்டகாசம் செய்வதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். 
பட்டாசு வெடித்தனர்....
சிறிது நேரத்தில் விவசாயிகள் சிலர் அங்கு வந்தார்கள். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினார்கள். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து வெளியேறி சென்றன. 
யானைகள் சேதப்படுத்தியதில், இளங்கோவின் தோட்டத்தில் ஒரு ஏக்கரில் கரும்பு பயிர்கள், ½ ஏக்கரில் வாழை ஆகியவை நாசம் அடைந்தன. 
கோரிக்கை
இதேபோல் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் கிராமத்தை சேர்ந்த குணசேகர் என்பவருக்கு சொந்தமான தக்காளி தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு யானைகள் புகுந்தன. பின்னர் தக்காளிகளை மிதித்தும், தின்றும் நாசம் செய்தன. இதில்  சுமார் ½ ஏக்கரில் விளைந்திருந்த தக்காளிகள் நாசம் அடைந்தது.  
நேற்று காலை குணசேகர் தோட்டத்துக்கு வந்து பார்த்தார். தக்காளிகள் சேதம் அடைந்து கிடந்ததை எண்ணி வேதனைப்பட்டார். 
இந்தநிலையில் யானைகள் சேதப்படுத்தியதால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உாிய நிவாரண உதவியை வனத்துறையினர் பெற்றுத்தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story