டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.98 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.98 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 31 May 2021 5:06 PM GMT (Updated: 31 May 2021 5:06 PM GMT)

கொள்ளிடம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுக்கடையில் கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடவாசல் மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக சீர்காழியை சேர்ந்த நாகராஜன்(வயது 46), விற்பனையாளராக எருக்கூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி(46) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். முழு ஊரடங்கு காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் இந்த கடை மூடப்பட்டுள்ளது
நேற்று முன்தினம் இரவு இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.98 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். நேற்று காலை மதுக்கடை கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள் மதுக்கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர். 
விசாரணை 
இதைத்தொடர்ந்து அவர் மதுக்கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த மதுபாட்டில்கள் திருட்டு போனது ெதரிய வந்தது. மேலும் மதுபாட்டில்கள் இருந்த அட்டை பெட்டிகள் கடைக்குள் சிதறிக்கிடந்தன. 
இது குறித்து கடை மேற்பார்வையாளர் நாகராஜன் புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுக்கடையில் கொள்ளையில் ஈடு்பட்டவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
கைது
இதன்பேரில் போலீசார், மதுக்கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற வடகால் கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தீனதயாளன்(22), வேட்டங்குடி வடக்கு தெருவை சேர்ந்த சிங் என்ற வெள்ளையன்(23) ஆகிய இருவரையும் 3 மணி நேரத்தில் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த, கவின், கார்கில் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் மீதி உள்ள மதுபாட்டில்கள் குறித்த தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story