கொரோனா தடுப்பு பணி குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


கொரோனா தடுப்பு பணி குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 31 May 2021 5:17 PM GMT (Updated: 31 May 2021 5:17 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வுக்கூட்டம் மாநில கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடந்தது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரோனா கட்டளை அறை மாநில கண்காணிப்பு அலுவலரும் தேசிய சுகாதார இயக்ககத்தின் இயக்குனருமான டேரிஸ்அகமத் தலைமை தாங்கினார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில்  இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் விவரம், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் விவரம், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விவரம், தடுப்பூசி கையிருப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி, ஆக்சிஜன் கையிருப்பு, ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி உள்ளிட்ட விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர்  கேட்டறிந்தார்.

நோய் தடுப்பு நடவடிக்கைகள்

மேலும் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மாநில கண்காணிப்பு அலுவலர் டேரிஸ்அமகத் கேட்டறிந்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் மாநில கண்காணிப்பு அலுவலரிடம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை விரிவாக எடுத்துரைத்தார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா நோய் தடுப்பு கட்டளை அறையை மாநில கண்காணிப்பு அலுவலர் டேரிஸ்அகமத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், சுகாதார பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story