நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 31 May 2021 5:50 PM GMT (Updated: 31 May 2021 5:50 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது.

நாமக்கல்:
983 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 315 ஆக அதிகரித்து.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 983 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 298 ஆக அதிகரித்து உள்ளது.
7 ஆயிரத்து 2 பேருக்கு சிகிச்சை
இதனிடையே மாவட்டத்தில் நேற்று 537 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 25 ஆயிரத்து 48 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 248 பேர் இறந்து விட்ட நிலையில், 7 ஆயிரத்து 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மெதுவாக உயர்ந்த கொரோனா பாதிப்பு தற்போது மின்னல் வேகத்தில் அதிகரித்து 32 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story