2,766 ஏக்கரில் உளுந்து, பருத்தி, எள் சாகுபடி செய்து சாதித்த விவசாயிகள்


2,766 ஏக்கரில் உளுந்து, பருத்தி, எள் சாகுபடி செய்து சாதித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 31 May 2021 6:17 PM GMT (Updated: 31 May 2021 6:17 PM GMT)

கண்மாயில் சேமித்த மழை நீரை பயன்படுத்தி 2,766 ஏக்கரில் 2-ம் போக சாகுபடி செய்து சாதனை படைத்த விவசாயிகளை கலெக்டர் பாராட்டினார்.

ராமநாதபுரம்
கண்மாயில் சேமித்த மழை நீரை பயன்படுத்தி 2,766 ஏக்கரில் 2-ம் போக சாகுபடி செய்து சாதனை படைத்த விவசாயிகளை கலெக்டர் பாராட்டினார்.
கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக சென்று, வேளாண்மைத்துறை ஒருங்கிணைப்புடன் விவசாயிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள 2-ம் போக சாகுபடி பணிகளை ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:- 
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நெல் முக்கிய பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 823 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,694 கண்மாய்கள் உள்ளன. அதில் 502 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 1192 சிறுபாசன கண்மாய்களும் அடங்கும். இருப்பினும் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதி என்ற பொதுவான பார்வை இருந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் முதல் போக சாகுபடியை மட்டுமே ஆர்வமுடன் மேற்கொள்கின்றனர். 2-ம் போக சாகுபடியில் ஆர்வம் காட்டாத நிலை இருந்து வருகிறது.
பாராட்டு
இதனை மாற்றிடும் விதமாக மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை முதல் போக நெல் சாகுபடியை தொடர்ந்து, 2-ம் போக சாகுபடி மேற்கொள்ள ஊக்கப்படுத்திடும் வகையில் வேளாண்மைத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இயல்பாக கிடைக்க வேண்டிய 48.5 மி.மீ மழையளவானது 248.74 மி.மீ அளவுக்கு 5 மடங்கு அதிகமாக பதிவானது. இதன் காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய், களரி கண்மாயில் தண்ணீர் சேமித்திட வாய்ப்பாக அமைந்தது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதிகளில் 2-ம் போக சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி பருத்தி விதைகள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன. 2,214 விவசாயிகள் மூலம் 2,766 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பயறு, எள், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளன. இதன் மூலம் 9 ஆயிரத்து 400 குவிண்டால் அளவில் கூடுதல் மகசூல் கிடைக்கப் பெற்று விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கும் வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story