கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் வெளியே சுற்றித்திரிந்தால் ரூ.2,000 அபராதம்


கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் வெளியே சுற்றித்திரிந்தால் ரூ.2,000 அபராதம்
x

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் வெளியே சுற்றித்திரிந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்க கண்காணிப்பு அதிகாரி கணேசன் உத்தரவிட்டார்.

திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் வெளியே சுற்றித்திரிந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்க கண்காணிப்பு அதிகாரி கணேசன் உத்தரவிட்டார்.
காய்ச்சல் கண்டறியும் முகாம்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மாநகரப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கண்காணிப்பு அதிகாரியாக நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் நியமிக்கப்பட்டு தடுப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் கண்டறியும் முகாம், வீடு, வீடாக சென்று மக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்வதை பார்வையிட்டார்.
களப்பணியாளர்கள் ஆய்வு
இதைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் ஆய்வக உரிமையாளர்களிடம் கலந்தாய்வு செய்தார். கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
பின்னர் 500 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாக காய்ச்சல், சளி பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள். திருப்பூர் மாநகர பகுதியில் 500 களப்பணியாளர்கள் நேற்று முதல் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். அந்த பணியையும் அவர் ஆய்வு செய்தார். மாநகர பகுதியில் களப்பணியாளர்கள் முழு அளவில் பயன்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
ரூ.2,000 அபராதம்
பின்னர் நேற்று இரவு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரி கணேசன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகர பகுதிகளில் கொரோனா தடுப்புக்காக மேற்கொண்ட விவரங்களை முழுவதுமாக ஆய்வு செய்தார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மேலும் அவர்களை கொரோனா பராமரிப்பு மையங்களில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுபோல் மாநகரில் முக கவசம் அணியாமல் வீதியில் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Next Story