டாக்டர் வீட்டில் ரூ 3 லட்சம் நகை பணம் திருட்டு


டாக்டர் வீட்டில் ரூ 3 லட்சம் நகை பணம் திருட்டு
x
தினத்தந்தி 31 May 2021 6:31 PM GMT (Updated: 31 May 2021 6:31 PM GMT)

கோவை காந்திபுரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கணபதி

கோவை காந்திபுரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

டாக்டர் வீடு 

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் கரூரில் டாக்டராகவும், இளைய மகள் அமெரிக்காவில் டாக்டராகவும் உள்ளனர். 

செல்வராஜ் கோவை காந்திபுரத்தில் டாக்டராக உள்ள மற்றொரு மகளுடன் வசித்து வருகிறார். செல்வராஜின் மனைவி இளைய மகளுடன் அமெரிக்காவில் உள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் உள்ள செல்வராஜின் உறவினர் இறந்துவிட்டார். இதனால் அவர் தனது மகள் மற்றும் உறவினர்களுடன் வீட்டை பூட்டிவிட்டு கரூர் சென்றார். 

ரூ.3 லட்சம் திருட்டு 

பின்னர் அவர்கள் அனைவரும்  கோவை திரும்பினார்கள். அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

அதுபோன்று வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.76ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. 

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. 

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு 

இது குறித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். 

மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் வீட்டில் திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 


Next Story