ஒரத்தநாடு அருகே பட்டா கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் உலா வந்த வாலிபர்கள் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு; 4 பேர் கைது


ஒரத்தநாடு அருகே பட்டா கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் உலா வந்த வாலிபர்கள் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 7:57 PM GMT (Updated: 31 May 2021 7:57 PM GMT)

ஒரத்தநாடு அருகே பட்டா கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் உலா வருவதுபோல் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஒரத்தநாடு:-

ஒரத்தநாடு அருகே பட்டா கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் உலா வருவதுபோல் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 

கொரோனா ஊரடங்கு

கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. 
பஸ் போக்குவரத்தும் இல்லாததால் பிரதான நகரங்களுக்கு இடைப்பட்ட மெயின் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி காற்று வாங்குகிறது. 

வீடியோ காட்சி

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ள நிலையில் சிலர் எந்த கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் வாகனங்களில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
போலீசார் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்தும், சாலையின் நடுவே தடுப்புகளை வைத்தும் கண்காணித்து வந்தாலும், வாகன போக்குவரத்து அதிகமாகவே உள்ளது. 
இந்த சூழலில் தஞ்சை மாவட்டம் மேலஉளூரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் கையில் பட்டா கத்தியுடன் உலா வருவது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

4 பேர் கைது

அந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டிச்செல்கிறார். அவருக்கு முன்புறம் ஒருவர் கத்தியை தூக்கி காட்டியபடி அமர்ந்து இருக்கிறார். இவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கும், இங்கும் உலா வருவதுபோல் காட்சிகள் பதிவாகி உள்ளன. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பட்டா கத்தியுடன் சிலர் மோட்டார் சைக்கிளில் உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீசார் மேலஉளூர் கிராமத்தை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேலஉளூரை சேர்ந்த முகேஷ்குமார் (வயது25), சந்தோஷ் (19), ராகவேந்திரன் (20), தங்கமுத்து (18) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் கொரோனா ஊரடங்கை மீறி கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் உலா வந்து, அதை செல்போன் மூலமாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story