சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும்  தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக  அறிவிக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 31 May 2021 11:37 PM GMT (Updated: 31 May 2021 11:37 PM GMT)

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சேலம்:
சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
சிலிண்டர் வினியோகம்
தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் மாநில துணை செயலாளர் பிரபு தலைமையில் மாவட்ட தலைவர் ரமேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் 3 எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு வீடு, வீடாக சென்று சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலில் சுமார் 2 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். 
முன்கள பணியாளர்கள்
கடந்த ஆண்டு பெரும் தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து தற்போது 2-வது அலை காலத்திலும், ஊரடங்கு நேரத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு இதுவரை எங்களுக்கு எந்தவித நிவாரணத்தொகையும் வழங்கவில்லை. 
எனவே டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என தொடர்ந்து பணியாற்றி வருபவர்களை முன்கள பணியாளராக அறிவித்த தமிழக அரசு அத்தியாவசிய பொருளான சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். முறையான மாத ஊதியம், இ.எஸ்.ஐ., ஈ.பி.எப். போன்ற சலுகைகள் வழங்க வேண்டும். 
வேலைநிறுத்தம்
குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து பாதுகாப்பு வழங்குவதோடு அச்சமின்றி பணிபுரியவும் தகுந்த ஆவண செய்ய வேண்டும். சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளோம். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது சேலம் மாவட்ட செயலாளர் செந்தில், பொருளாளர் சிவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story