பெங்களூருவில் ஊரடங்கால் சிரமப்பட்ட பார்வையற்ற தம்பதிக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் பாராட்டுகள் குவிகிறது


பெங்களூருவில் ஊரடங்கால் சிரமப்பட்ட பார்வையற்ற தம்பதிக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் பாராட்டுகள் குவிகிறது
x
தினத்தந்தி 1 Jun 2021 2:02 AM GMT (Updated: 1 Jun 2021 2:02 AM GMT)

பெங்களூருவில் ஊரடங்கால் சிரமப்பட்ட பார்வையற்ற தம்பதிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதவி செய்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு விஜயநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மனு. நேற்று காலையில் விஜயநகர் போலீஸ் நிலையத்திற்கு ஒரு பார்வையற்ற தம்பதி குழந்தைகளுடன் வந்தனர். அவர்களை சந்தித்த, சப்-இன்ஸ்பெக்டர் மனு எதற்காக போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அப்போது ஊரடங்கு காரணமாக மிகவும் சிரமப்படுவதாகவும், ஏதாவது உதவி செய்யும்படி அந்த தம்பதி கூறினார்கள்.

மேலும் அந்த தம்பதியின் பெயர்கள் பசவராஜ், சென்னம்மா என்று தெரிந்தது. அவர்களுக்கு 2 வயதில் சாகர் மற்றும் 6 மாதமே ஆன சமர்த் என்ற குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த தம்பதிக்கு உதவி செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர் மனு கூறினார்.

உடனடியாக அந்த தம்பதிக்கு 50 கிலோ அரிசி, 10 கிலோ பருப்பு, 5 கிலோ கோதுமை மாவு, 10 லிட்டர் சமையல் எண்ணெய், 10 கிலோ சர்க்கரை, 2 கிலோ டீ தூள், 1 கிலோ பால் பவுடர், ஒரு பண்டல் பிஸ்கட், மேலும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள், உணவு பொருட்களை சப்-இன்ஸ்பெக்டர் மனு வாங்கி கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பார்வையற்ற தம்பதியினர், சப்-இன்ஸ்பெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இதற்கிடையில், பார்வையற்ற தம்பதிக்கு, சப்-இன்ஸ்பெக்டர் மனு உதவி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் மனுவை, மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Next Story