அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சரத்பவாருடன் தேவேந்திர பட்னாவிஸ் திடீர் சந்திப்பு


அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சரத்பவாருடன் தேவேந்திர பட்னாவிஸ் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 9:29 AM GMT (Updated: 1 Jun 2021 9:29 AM GMT)

சரத்பவாரை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடல் நலம் தேறியது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சமீபத்தில் பித்தப்பை கல் பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டாக்டர்கள் அறிவுறையின்படி அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.உடல் நலம் தேறி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்டம் கண்டு இருப்பதாக பேசப்பட்ட நிலையில் அவர்களது சந்திப்பு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு
இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று திடீரென சரத்பவாரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். அப்போது சரத்பவாரிடம் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், மராத்தா இடஒதுக்கீடு, அரசியல் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து சரத்பவார் மீண்டும் தனது பணியை தொடங்கி வருகிறார்’’ என்று குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் அரசியல் பின்னணி இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story