மும்பையில் பயங்கரம்: கணவரை கொன்று உடலை வீட்டில் புதைத்த மனைவி கைது கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு


மும்பையில் பயங்கரம்: கணவரை கொன்று உடலை வீட்டில் புதைத்த மனைவி கைது கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Jun 2021 3:11 PM GMT (Updated: 2 Jun 2021 3:11 PM GMT)

மும்பையில் கணவரை கொன்று உடலை வீட்டில் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை, 

மும்பை தகிசர் ராவல்பாடா பகுதியை சேர்ந்தவர் ரயீஸ் சேக். துணிக்கடையில் விற்பனை ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரசிதா சேக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அமித் மிஸ்ரா என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ரயீஸ் சேக் இல்லாத சமயத்தில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதுபற்றி அறிந்த ரயீஸ் சேக் தனது மனைவியை கண்டித்து உள்ளார். இதனால் ரசிதா சேக் தனது கள்ளக்காதலன் அமித் மிஸ்ராவிடம் தெரிவித்து கணவரை கொலை செய்ய திட்டம் போட்டனர்.

இதன்படி சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரயிஸ் சேக்கை கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலை வீட்டிலேயே புதைத்தனர். கடந்த மாதம் 25-ந்தேதி ரயீஸ் சேக்கின் சகோதரர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் ரசிதா சேக்கிடம் விசாரித்தனர்.

மேலும் வீட்டில் நடத்திய சோதனையில் மண் தோண்டப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

இதனால் ரசிதா சேக்கிடம் போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்ததில் தனது கணவரை கொன்று உடலை வீட்டில் புதைத்தாக திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புதைத்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரசிதா சேக்கை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய அமித் மிஸ்ரா தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story