ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை


ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 6 Jun 2021 6:30 PM GMT (Updated: 6 Jun 2021 6:30 PM GMT)

கோவையில் ஊரடங்கு மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் கட்டாயகொரோனா பரிசோதனை செய்தனர்.

கோவை

கோவையில் ஊரடங்கு மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் கட்டாயகொரோனா பரிசோதனை செய்தனர்.

தீவிர வாகன சோதனை 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

ஆனாலும் இளைஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சாலையில் தேவை இல்லாமல் சுற்றி வருகிறார்கள்.

குறிப்பாக இளைஞர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட இருசக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள். 

இந்த நிலையில்  கோவையில் பல இடங்களில் போலீசார் சாலையில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கட்டாய கொரோனா பரிசோதனை

அதுபோன்று கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை பகுதியில் திடீரென்று மாநகராட்சி ஊழியர்கள் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினார்கள். 

அப்போது தேவை இல்லாமல் சுற்றியவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையும் செய்யப் பட்டது. 

இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்த சிலர் மாநகராட்சி ஊழியர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் அவர்களின் நடவடிக்கை தொடர்ந்தது. 

இவ்வாறு 100-க்கும் மேற்பட்டோரிடம் ஆதார் கார்டு எண் அல்லது செல்போன் எண் பெற்றுக்கொண்டு, சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து வாகனங்களை திருப்பிக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story