மராட்டியத்தில் இன்று நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்; மக்கள் திரளாக கூடுவதை அனுமதிக்க கூடாது: அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு


மராட்டியத்தில் இன்று நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்; மக்கள் திரளாக கூடுவதை அனுமதிக்க கூடாது: அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:14 AM GMT (Updated: 7 Jun 2021 11:14 AM GMT)

மராட்டியத்தில் இன்று புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும் இதை பயன்படுத்தி மக்கள் திரளாக கூடுவதை அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று நடைமுறைக்கு வருகிறது.

தளர்வுகள்
கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய சதவீதத்தை வைத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட, மாநகர பகுதிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு சதவீதம் 5-க்கு கீழும், ஆக்சிஜன் படுக்கைகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகள் 1-வது பிரிவில் வருகின்றன. இந்த பகுதிகளில் ஏறக்குறைய முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2, 3, 4-வது பிரிவு பகுதிகளிலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் மும்பை 3-வது பிரிவில் வருகிறது. இங்கு பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. தொற்று நோய் பாதிப்பு சதவீதம் 20 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகள் கடைசி பிரிவில் (5-வது பிரிவு) வருகின்றன. இங்கு அத்தியாவசிய கடைகளை திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.

முதல்-மந்திரி ஆலோசனை
இதற்கிடையே முதல் நான்கு பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநில அரசு அறிவித்து உள்ள தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) நடைமுறைக்கு வருவதால் பொதுமக்கள் மடை திறந்த வெள்ளம் போல வெளியே வரவும், அவர்கள் திரளாக கூடவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

உறுதிப்படுத்த வேண்டும்
மராட்டியத்தில் ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படவில்லை. 3-வது அலை அச்சுறுத்தல் வெகுதூரத்தில் இல்லை. எனவே தற்போது 5 வகை தளர்வுகள் செய்யப்பட்டாலும், மாநிலத்தில் எந்த இடத்திலும் பொதுமக்கள் திரளாக கூட அனுமதிக்கக்கூடாது. மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரேனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்து கூடுதல் தளர்வுகள், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளூர் நிர்வாகங்கள் முடிவு எடுக்க வேண்டும்.

தொழில் துறையினருடன் ஆலோசனை
முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொழில்துறை மற்றும் சினிமா துறையினருடன் காணொலி காட்சி மூலமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
மாநில அரசு தெரிந்தே ஆபத்தான முடிவை எடுத்து உள்ளது. எனவே மக்கள் அவர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். உடனடியாக எதுவும் மாறிவிடப்போவது இல்லை. சில வரைவுகளும், பிரிவுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமா, கடுமையாக்க வேண்டுமா என்பது குறித்து உள்ளூர் நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளும்.

நாட்டுக்கு முன்மாதிரி
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள போதும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தொழில்துறை இடையூறு இன்றி செயல்பட முடியும் என்பதற்கு மராட்டியம் நாட்டுக்கு முன்மாதியாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் நம்மை வீழ்த்த நாம் அனுமதிக்க கூடாது. நீங்கள் லாக்டவுன் (ஊரடங்கு), நாக்டவுன் (கொரோனா உயிரிழப்பு) இரண்டையும் விரும்பவில்லை. எனவே அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும். அச்சுறுத்தலாக உள்ள 3-வது அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் அது உற்பத்தியை பாதிக்க கூடாது.

தொழிற்சாலைகள் அவர்கள் பகுதியிலேயே தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு தற்காலிக தங்கும் இடங்களை அமைத்து கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் கட்டாயம் முககவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும். மழைக்காலத்தில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொழிலாளர்களுக்கு அடிக்கடி மருத்துவ சோதனைகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வரவேற்பு
கூட்டத்தில் மாநில அரசு நோய் பாதிப்பு குறைந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்தனர். இதில் பிரபல தொழில் அதிபர்கள் உதய் கோடக், சஞ்சீவ் பஜாஜ், தியாகராஜன், நவ்சாத் போர்பஸ், அமித்கல்யாண், அசோக் இந்துஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story