ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசி, சாபமிட்ட ஆட்டோ டிரைவர் கைது


ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசி, சாபமிட்ட ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2021 12:09 AM GMT (Updated: 8 Jun 2021 12:09 AM GMT)

ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் அடைந்த டிரைவர், பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசியதுடன், அவருக்கு சாபமிட்டார். அவர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பெரம்பூர்,

கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று காலை முத்தியால்பேட்டை போலீசார், பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா தலைமையில் பாரதி மகளிர் கலைக்கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, இ-பதிவு உள்ளதா? என போலீசார் விசாரித்தனர்.

அதற்கு பெரம்பூர் வீனஸ் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஸ்கர் அலி (வயது 39) என்பவர் ஆட்டோவில் உடல் ஊனமுற்றோரை அழைத்து வந்ததாகவும், பின்னர் சமூக சேவை செய்வதாகவும் முன்னுக்கு பின் முரணாக பேசினார். முதலில் இ-பதிவு செய்து இருப்பதாக கூறினார். அதை காட்டும்படி போலீசார் கேட்டதற்கு காண்பிக்க மறுத்தார். இதனால் ஆட்டோவை பறிமுதல் செய்து சாவியை பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா வைத்து கொண்டார்.

ஒருமையில் பேசினார்

இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்கர் அலி, பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் ஆவேசமாக கையை நீட்டி மிரட்டும் தோணியில் பேசி வாக்குவாதம் செய்தார். அதற்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர், “நான் எனது கடமையை செய்து உள்ளேன். நான் வழக்குப்பதிவு செய்கிறேன். கோர்ட்டில் வந்து அபராதம் செலுத்தி ஆட்டோவை வாங்கி செல்லுங்கள்” என்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர், பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசினார். அதற்கு சப்-இ்ன்ஸ்பெக்டர், “நான் உங்களை மரியாதையுடன்தான் பேசுகிறேன். நீங்களும் மரியாதையாக பேசுங்கள்” என்றார். சக போலீசாரும் ஆட்டோ டிரைவரை அங்கிருந்து செல்லும்படி கூறினர்.

ஆட்டோ டிரைவர் கைது

அத்துடன் ஆட்டோ டிரைவர் அஸ்கர் அலி, பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியதுடன், ஆவேசமாக சாபமும் விட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டரின் கையில் இருந்த ஆட்டோ சாவியை பறிக்க முயன்றபோது, அவரது கை விரல் நகம் பட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கையில் கீறல் ஏற்பட்டது.

இதையடுத்து ஆட்டோவை அங்கேயே விட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவர் அஸ்கர் அலி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story