புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைநோய்க்கு மேலும் ஒருவர் பலி


புதுக்கோட்டை மாவட்டத்தில்  கருப்பு பூஞ்சைநோய்க்கு மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 8 Jun 2021 5:28 PM GMT (Updated: 8 Jun 2021 5:28 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் இறந்தார்.

ஆலங்குடி,ஜூன்.9-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கருப்பு பூஞ்சை
கொரோனா 2-வது அலையில் தொற்று எண்ணிக்கை பரவலாக அதிகரித்து உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. இதற்கிடையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கமும் அதிகரித்து இருக்கிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஆலங்குடி அருகே வெள்ளைகொல்லை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 55) கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி இறந்தார். அதேபோல் ஆலங்குடி அருகே குப்பகுடி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரமோகன் (63) கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியானார்.
மேலும் ஒருவர் பலி
இந்தநிலையில் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் இறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஆலங்குடி அருகே உள்ள பாப்பான் விடுதி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் சின்னாங்குட்டி (வயது 76). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், தொண்டைவலி, இருமல், சளி உள்ளிட்ட பிரச்சினை இருந்தது. இதனால் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக  மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அவர்  சிகிச்சை பலன் இன்றி இறந்துவிட்டார். பின்னர் அவரது உடல் மதுரை மாநகராட்சிப் பணியாளர்களால் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Next Story