காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டிய மழை


காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டிய மழை
x
தினத்தந்தி 8 Jun 2021 6:25 PM GMT (Updated: 8 Jun 2021 6:25 PM GMT)

காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி பகுதியில் நேற்று ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி பகுதியில் நேற்று ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பலத்த மழை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பகல் நேரங்களில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஊரடங்கு காரணமாக வீடுகளில் இருந்த மக்கள் வெயில் பாதிப்பாலும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. பின்னர் திடீரென்று காலை 11.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. அது கனமழையாக கொட்ட தொடங்கியது. பகல் 12.30 மணி வரை பலத்த மழை பெய்தது.

சாலையில் ஓடிய மழைநீர்

இதன் காரணமாக செக்காலை சாலை, பெரியார் சிலை பகுதி, புதிய பஸ் நிலையம், கல்லூரி சாலை, கழனிவாசல் பகுதி, வ.உ.சி. சாலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தற்போது முதல் பீட் பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதி, கழனிவாசல் பகுதி, வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று பெய்த மழை காரணமாக அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாகவே காட்சியளித்தது.
இதனால் அந்த பகுதியில் காலை நேரங்களில் பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் காரைக்குடியை சுற்றியுள்ள ஒரு சில பகுதியில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்ததால் அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

தேவகோட்டை, இளையான்குடி

இதே போல தேவகோட்டை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் நேற்று மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட இளையான்குடி, பெரும்பச்சேரி, தாயமங்கலம், வாணி, இளமனூர், குமாரகுறிச்சி, நகரகுடி உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story