காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jun 2021 9:06 PM GMT (Updated: 8 Jun 2021 9:06 PM GMT)

அருப்புக்கோட்டை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சாலை விரிவாக்க பணி 
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சியில் எம்.எஸ்.ஆர். காலனி, முத்தரையர் நகர் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
பாளையம்பட்டியிலிருந்து நான்கு வழிச்சாலை வரை புதிதாக சாலை விரிவாக்க பணி நடைபெற்றதால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் அந்த பகுதிகளுக்கு கடந்த 6 மாதகாலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
சாலை மறியல் 
மேலும் குடிநீர் வழங்காதது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் நான்கு வழிக்கு செல்லும் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.
பேச்சுவார்த்தை 
இதுகுறித்து தகவல்அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
பின்னர் ஒரு சில நாட்களில் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story