விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு
x
தினத்தந்தி 9 Jun 2021 4:46 PM GMT (Updated: 9 Jun 2021 4:46 PM GMT)

மேலும் 392 பேருக்கு தொற்று

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38,480 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 294 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 33,655 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 4,531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செஞ்சி அருகே சின்னநொளம்பை கிராமத்தை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும், மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் அருகே சி.என். பாளையத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விக்கிரவாண்டி மந்தக்கரையை சேர்ந்த 67 வயதுடைய முதியவரும், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் அருகே புதுப்பட்டை சேர்ந்த 57 வயதுடைய நபரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.-
மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 392 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,872 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,338 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 4,236 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story