அரிய வகை ஆந்தையை துரத்திய காக்கை கூட்டம்


அரிய வகை ஆந்தையை துரத்திய காக்கை கூட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2021 5:57 PM GMT (Updated: 9 Jun 2021 5:57 PM GMT)

பறக்க முடியாமல் தவித்த அரிய வகை ஆந்தையை துரத்திய காக்கை கூட்டம்

குழித்துறை:
குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் நேற்று காலை ஒரு ஆந்தையை காக்கை கூட்டம் துரத்திக் கொண்டு இருந்தன. அந்த காக்கைகளிடம் சிக்கிய ஆந்தை தன்னை காப்பாற்றிக் கொள்ள அலறியபடி பறந்து கொண்டு இருந்தது. சிறிதுநேரத்தில் அந்த ஆந்தை மிகவும் களைப்புற்ற நிலையில் மேலும் பறக்க முடியாமல் கீழே தரையில் மெல்ல வந்து அமர்ந்தது. ஆனாலும், காக்கைகள் விடாமல் அந்த ஆந்தையை சூழ்ந்து கொண்டு கொத்த தொடங்கின. இதனால், ஆந்தை அச்சத்துடன் அப்பகுதியில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு இடையே சென்று பதுங்கிக் கொண்டது. இதை அந்த பகுதியில் நின்ற சில ஆட்டோ டிரைவர்கள் கண்டனர். உடனே அவர்கள், காக்கை கூட்டத்தை விரட்டி விட்டு கார்களுக்கு இடையே பதுங்கிய அரிய வகை ஆந்தையை பத்திரமாக மீட்டனர். அப்போது, தான் அது அரிய வகையை சேர்ந்த ஆந்தை என்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அரிய வகை ஆந்தையை பார்த்து விட்டு சென்றனர்.
பின்னர், இதுபற்றி களியல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினரிடம் அரிய வகை ஆந்தையை ஆட்டோ டிரைவர்கள் ஒப்படைத்தனர். 

Next Story