வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய 110 குழுக்கள் அமைக்கப்பட்டு


வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய 110 குழுக்கள் அமைக்கப்பட்டு
x
தினத்தந்தி 9 Jun 2021 6:10 PM GMT (Updated: 9 Jun 2021 6:10 PM GMT)

வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய 110 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பரிசோதனை செய்வதை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி,

வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய 110 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பரிசோதனை செய்வதை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆய்வு செய்தார்.

ஆய்வு

பொள்ளாச்சி நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள் கொண்ட கணக்கெடுப்பு குழு நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனி பகுதியில் கணக்கெடுப்பு பணிகளை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி இருமல் போன்ற பாதிப்புகள் உள்ளதா? உள்ளதாக என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

 மேலும் கணக்கெடுப்பு விவரங்களை பார்வையிட்டார். ஆய்வின் போது நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், தர்மராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறியதாவது:-

110 குழுக்கள் அமைப்பு

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு பகுதிகளில் 22,500 வீடுகள் உள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பை முன் கூட்டியே கண்டறியும் வகையில் தினமும் வீடுகளுக்கு சென்று தெர்மல் ஸ்கேன் மூலம் பொதுமக்களின் உடல்வெப்பநிலை கண்டறியப்படுகிறது. 

அப்போது 98.6 டிகிரி வெப்பநிலைக்கு மேல் உள்ள நபர்களின் விவரம் பெறப்படுகிறது. அந்த நபர்களுக்கு அன்றைய தினமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சளி, காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் ஏதுவும் உள்ளதா? எனவும் கணக்கெடுக்கப்படுகிறது.

இதற்காக 200 வீடுகளுக்கு 2 நபர்கள் வீதம் 110 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு பணியில் 220 பேர் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ள நபர்களுக்கு ஆக்சி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவு கண்டறியப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களுக்கு இந்த குழுவினர் உதவி செய்வார்கள். 

இதன் மூலம் பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிசோதனை சிகிச்சைக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். பொதுமக்கள் வீடுகளுக்கு காய்ச்சல், ஆக்சிஜன் அளவு பரிசோதனைக்கு வரும் கணக்கெடுப்பார்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story