திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 9 Jun 2021 6:15 PM GMT (Updated: 9 Jun 2021 6:15 PM GMT)

திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள ஜம்புளியம்பட்டியை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது மகன் யோகராஜ் (வயது 9). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று பாக்கியலட்சுமியுடன் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு சென்றான்.  அப்போது எதிர்பாராதவிதமாக யோகராஜ் கிணற்றில் தவறி விழுந்தான். இந்தநிலையில்  நீச்சல் தெரியாததால் அவன் தண்ணீரில் மூழ்கினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் கிணற்றில் இறங்கி யோகராஜை தேடினர். ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து திண்டுக்கல்  தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி யோகராஜை பிணமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் யோகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story