ஷீல்டு கால்வாயை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை


ஷீல்டு கால்வாயை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2021 6:20 PM GMT (Updated: 9 Jun 2021 6:20 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் கால்வாயாக உள்ள ஷீல்டு கால்வாயை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் கால்வாயாக உள்ள ஷீல்டு கால்வாயை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பாசன திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட தாலுகாக்களில் 6 ஆயிரத்து 38 ஏக்கர் நிலம் பெரியாறு வைகை பாசன திட்டத்தில் பாசனவசதி பெறுகின்றன. இதற்காக ஷீல்டு கால்வாய், லெசிஸ் கால்வாய், 48-ம் மடை, கட்டாணிப்பட்டி1,2 ஆகிய 5 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன..இதில் ஷீல்டு கால்வாய் 1925-ல் மண் கால்வாயாக 7 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
இந்த கால்வாய் மதுரை மாவட்டம் மேலூர் அருகே குறிச்சிப்பட்டி கண்மாயில் தொடங்குகிறது. இதன் மூலம் சிவகங்கை தாலுகாவில் உள்ள கள்ளராதினிப்பட்டி, திருமலை, மேலப்பூங்குடி, சாலூர், சோழபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் பயன் அடைகின்றன. இதில் இருந்து 1748.25 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. ஷீல்டு கால்வாய் புனரமைப்பு செய்யப்படாமல் மண் கால்வாயாக உள்ளதால் இதி்ல் வரும் தண்ணீர் முழுமையாக கண்மாய்களுக்கு செல்வதில்லை.

நிதி ஒதுக்கீடு

மேலும் இது அகலமான மண் கால்வாய் என்பதால் நீர்உறிஞ்சப்பட்டு முழுமையான பயன் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இந்த கால்வாயை சீரமைக்க கோரி இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக 2018-ல் 110 விதியின் கீழ் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் கால்வாயாக மாற்றம் செய்யப்படும், என அறிவிக்கப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று வரை ஷீல்டு கால்வாய் புனரமைப்பு பணிகள் செய்யப்படவில்லை. இதனால் கால்வாயில் திறக்கப்படும் நீர் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தற்போதைய புதிய அரசு ஷீல்டு கால்வாய் பிரச்சினையில் கவனம் செலுத்தி பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இந்த ஆண்டு பாசன காலத்திலாவது பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story